Wednesday, December 12, 2012

இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகள் 16 பேர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

திடீர் சுகயீனம் காரணமாக இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளில் சிலர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

சுமார் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தபோதும் சுமார் 16பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்பட்டு, தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த 'நவம் அறிவுக் கூடம்' அமைந்திருந்த இடத்தில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்கியிருந்த யுவதிகளே, நேற்று நள்ளிரவு அங்கு கேட்ட பயங்கரமான சத்தம் காரணமாக பயந்து உளநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

16 யுவதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிலர் மயக்கமாகிய நிலையில் இருந்ததாக வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கட்டடத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஆய்வுகூடத்தின் முன்னால் இலத்திரனியில் சாதனங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை இவர்களுக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment