மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க
யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் வெலிகந்தை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுலை தொடர்பிலும் பல்கலைக்கழக செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம் தொடர்பிலும் இன்று யாழ் பல்கலைக்கழக உயர்மட்டம் மாணவர்களின் பெற்றோர் யாழ் படைத்தலைமையக அதிகாரிகளிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது மாணவர்களை விடுவிப்பது கனவிலும் நடைபெறாது என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்தாக செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இச்செய்தி தொடர்பில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை தொடர்பு கொண்டு வினவினோம்.
மாணவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என வெளியாகியுள்ள செய்திகள் ஊடகங்களின் விஷமப்பிரச்சாரம் எனத் தெரிவித்த அவர் மாணவர்கள் பொலிஸாரின் விசாரணை முடிவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியை சந்திப்பின்போது தான் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் இச்சந்திப்பில் கலந்து கொண்ட பெற்றோரிடம் பொலிஸாரின் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணைகள் முடிவில் தங்கள் பிள்ளைகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை வழங்கிய அதே நேரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலே பயில்வதை தவிர்ந்த வேறு செயல்களில் ஈடுபடுவது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் இருவர் எங்கள் தலைவர் பிரபாகரன் எனத் தெளிவாக தெரிவித்துள்ளனர். எனவே அவர்களை பயங்கரவாதிகள் என எடுத்துக்கொள்வதை தவிர எங்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை என்றும் கூறினார்.
மேலும் குறித்த மாணவர்கள் தடுப்பு முகாம்களிலிருந்து கொண்டு தமது கல்வியினை தொடர்வதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பாதுகாப்புச் செயலர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்

No comments:
Post a Comment