Wednesday, December 19, 2012

புலிகளின் தலைமையை மீட்க, USA அனுப்பிய இரகசிய விமானம் - கொழும்பு ஆய்வாளர் தகவல்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியொன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“ஒரு கட்டத்தில், சிறிலங்கா அரசுடன் கலந்தாலோசித்து, விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் வெளியேற்றுவதற்கு தனது வளங்களைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா தீவிரமான கவனம் செலுத்தியது.

வன்னியின் கிழக்குப் பகுதியில் தரைப்போர் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் நிபுணர்கள் குழுவொன்றை சிறிலங்காவுக்கு அனுப்பியது.

விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களை மீட்பதற்கான வழிகள் மற்றும் ஏற்பாடுகளை ஆராய்வதற்கே அவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பசுபிக் கட்டளைப்பீடத்தின் சிறப்பு விமானம் பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில மணிநேரம் முன்னதாகவே, அப்போதைய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் றொகித போகொல்லாகமவிடம், அப்போது அமெரிக்கத் தூதுவராக இருந்த றொபேட் ஓ பிளேக், இது குறித்து எச்சரித்திருந்தார்” என்றும் சாமிந்ர பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment