Wednesday, January 16, 2013

பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டிலேயே பலாக்காய் திருடிய துணிகரமிக்க திருடர்கள்

ஹோரணை நீதிவான் நீதிமன்றத்திற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருடைய வீட்டில் பலாக்காய் திருடிய குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பொலிஸ் அத்தியட்சகரான சுனில் விஜேசேகரவின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது. இவர் தனது முறைப்பாட்டில் வீட்டுத் தோட்டத்திலிருந்து இரண்டு பலாக்காய்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மில்லாவ, கிதெல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இறப்பர் பால் வெட்டும் இருவரது பெயர்களையும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் முறைப்பாட்டில் இவர் குறிப்பிட்டிருந்தார்.

சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை அடுத்து அவ்விருவரையும் பிணையில் செல்ல ஹொரணை நீதவான் அனுமதி வழங்கினார்.

திருடப்பட்டதாகக் கூறப்படும் இரு பலாக்காய்களையும் பெற்றுச் செல்வதற்காக 18ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதவான் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment