இலங்கை அரசாங்கம் மீது போர்க்குற்றங்களை சுமத்திய போதும் இலங்கைக்கு மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ் பெறுமதியான சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பிரித்தானியா கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளதாக, பிரித்தானியாவின் 'இன்டிபென்டென்ட்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.'இன்டிபென்டென்ட்' நாளேட்டின் தலைப்புச் செய்தியிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கப் புள்ளிவிபரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, குறைந்தது, 3 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன.
கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன.
மனிதஉரிமை மீறல்கள் காரணமாக, கவலைக்குரிய நாடாக இலங்கையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பட்டியலிட்டுள்ள போதிலும் இந்த ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கைக்கு 3.741 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஏற்றுமதிக்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது. இதில் 3 மில்லியின் பவுண்ட்ஸ் இராணுவ தளபாடங்களாகும்.
இலங்கைக்கு 330,000 பவுண்ட்ஸ் பெறுமதியான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் பெறுமதியான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும்,அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் தமிழ் மக்கள் மீதும் அக்கறையிருப்பதாக உலக வல்லரசு நாடுகள் காட்டிக்கொண்டு மறு புறம் இலங்கை அரசாங்கத்தோடு கைகோர்த்துள்ளன. மக்கள் இதனை சரியாக புரிந்து தங்கள் பாதைகளை சீர்ப்படுத்த வேண்டும் அப்போது தான் பெற்ற சமாதானத்தை பாதுகாக்க முடியும்.
No comments:
Post a Comment