தமிழகத்தில் இலங்கைக் கெதிரான போராட்டங்கள் திடீரென மிகைப்பட்ட அளவில் வெடித்தெழும்பியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்பட வேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம். இப்படியான கோரிக்கைளோடு மாணவர்கள் போராட ஆரம்பித்திருப்பது உண்மையில் தன்னெழுச்சியாக நடைபெற்றதுதானா என்ற சந்தேகத்தை இந்திய அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளார்கள்.கருணாநிதியின் திமுக, டெசோ கூட்டம் ஒன்றை டெல்லியில் நடத்தி, தமிழ் நாட்டில் ஒரு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. சீமான் கட்சியின் அங்கத்தவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளதுடன், பின்னணியில் யார் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ள ஒரு மாணவர் அமைப்பைச் சேர்ந்த எட்டு மாணவர்கள், சென்னையில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
ஒரு தமிழ்க் குழுவினர் மதுரையில் அமைந்திருந்த மிகின் லங்கா அலுவலகத்தைச் சூறையாடியுள்ளனர். வை.கோபாலசாமியின் மதிமுக, இலங்கை உதவித் தூதரகத்தை முற்றுகையிட்டதுடன் இலங்கை ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரித்து, கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததில் கைதாகிப் பின்னர் விடுதலையானார்கள். நேற்று முன்தினம் தஞ்சை பெரியகோவிலுக்கு கல்விச்சுற்றுலா வந்த புத்த பிக்கு தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார். அவர் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவர் சென்ற வாகனத்தை மறித்து பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இலங்கையை சேர்ந்த ஞானலேகா (வயது46) என்கிற இந்த புத்த பிக்கு டெல்லியில் தொல்லியல் துறை பட்டமேற்படிப்பு படித்து வருபவர். ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக டெல்லியிலிருந்து தஞ்சைக்கு கல்விச்சுற்றுலா வந்த 17 மாணவ, மாணவிகளில் இவரும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். தமிழ்தேச பொதுவுடமைக்கட்சியை சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த அநாகரிக வன்முறைகள் உண்மையில் இலங்கைத் தமிழ்மக்கள் மீதான அக்கறையில் செய்யப்படுவதுதானா என்ற கேள்வி எழுகிறது. இலங்கை அரசை யுத்தக் குற்ற விசாரணைப் பொறியில் மாட்டுவதால் இங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது என்பதை யாரும் விளக்காமலேயே ஆர்ப்பாட்டங்களை நடத்தி, அதையெல்லாம் ஊடகங்களில் தமிழ்ப் பெருமிதச் செய்திகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் கஷ்டங்களுடன் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கையானது, தமிழ் நாட்டில் ஒரு மிகச்சிறிய மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையை விட பலமடங்கு குறைவானது. தமிழக அரசோ எதிர்க்கட்சியோ அங்குள்ள மக்களோ நினைத்தால் ஒரே வாரத்திலேயே இங்குள்ள மக்களின் வாழ்க்கைக் கஷ்டங்களைப் போக்கிவிட முடியும். அனைவருக்கும் தொழில் வசதி இருப்பிட வசதி படிப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துவிட முடியும்.
அதையெல்லாவற்றையும் யாரும் கேட்பதுமில்லை, கருதுவதுமில்லை. குற்ற விசாரணை நடத்துவதிலும் தண்டனை வாங்கித் தருவதுமே திருப்தியானது என்று மிகையாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மிகை இந்திய அரசை சங்கடப்படுத்துவதற்காக இலங்கைத் தமிழ் பிரச்சினையும் தமிழ் நாடும் பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றனவா வெளிச் சக்திகளால் என்ற சந்தேகத்தை இப்போது இந்திய ராஜதந்திரிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment