Saturday, March 16, 2013

இலங்கையை யார் யார் கலைத்துத்திரிவது!

தமிழ் மக்களுக்கான அரசியலுரிமைகளைப் பெறுவதற்கான தீர்வு முக்கியமில்லை, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேசக் கூண்டிலேற்றி தமிழ்ப் பெருமிதத்தை நிலைநாட்டுவதே முக்கி யம் என்னும் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எதிர்க் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்தால், ஜெனிவாவில் இலங்கை அரசு தப்பிவிடும் அதற்கு விடக்கூடாது என்று பதற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடத்தும் பத்திரிகை. தமிழ் மக்களின் கவலைகளை மாற்றுவதல்ல, இலங்கை அரசைப் பொறிக்குள் மாட்டுவதே தங்களது அரசியல் லாபங்களுக்கான புளுகம் என்பதைப் பச்சையாகவே காட்டிக் கொண்டுள்ளது கூட்டமைப்புப் பத்திரிகை.

விசயம் என்னவென்றால், கூட்டமைப்பினரின் உண்ணாவிரதக் கூட்டாளியும், மகிந்த அரசை சர்வதேசச் சிறையில் அடைத்து விட்டு ஆட்சிக்கு அவர்கள் கொண்டுவர எண்ணியிருப்பவருமான ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மகிந்த அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளத் தயார் என்று சொல்லியிருப்பதே கூட்ட மைப்பினரைக் கோபப்படுத்தியிருக்கிறது.

ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட இருக்கும் இந்தப் பொன்னான சமயத்தில், இலங்கையின் எதிர்க்கட்சி இலங்கை அரசுக்கு இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ஒத்துழைப்பு வழங்கப்போவதாக அறிவித்து குட்டையைக் குழப்பிவிடப் பார்க்கிறதாம். அதாவது இலங்கை அரசை சர்வதேச விசாரணைக் கூண்டில் ஏற்றுவதை விட்டுவிட்டு தீர்வு, நல்லிணக்கம் என்று அவர்களது முதலுக்கே மோசம் செய்யப் பார்க்கிறார் ரணில் என்ற கோபம்.

கொழும்பில் புதன்கிழமையன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் குறிப்பிட்டிருப்பவை இவைதான்: ஜெனிவாவில் அமெரிக்கா நிறைவேற்றப்போகும் பிரேரணை எமது நாட்டுக்கு எதிரானது. அதனை முறியடிப்பதற்கு, அரசுக்கு ஆதரவளிக்க நாம் தயாராக உள்ளோம். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்தல், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் நாம் அவற்றுக்கு ஆதரவு வழங்குவோம். அதற்காக அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளவும் நாம் தயார்.

இதுதான் ரணில் விக்கிரமசிங்க சொல்லியிருப்பது. இதற்குத் தமிழ்த் தரப்பிலிருந்து கோபப்பட்டு கருத்து வெளியிடுபவர்கள் எந்தமாதிரியான தேவைகளுடன் அரசியல் செய்துகொண்டிருக் கிறார்கள் என்பதில் இப்போது எந்த ஒளிவுமறைவும் இன்றி வெளித்துவிட்டது.

உண்மையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கும், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் நாட்டின் எதிர்க்கட்சியும் சம்மதம் தெரிவித்திருக்கும் இந்தத் தருணத்தில் தமிழ்த் தரப்பு செய்ய வேண்டியதென்ன? எதிர்ப்புகளற்ற இந்த சூழலைப் பயன்படுத்தி தீர்வை வைக்கும்படி அர சாங்கத்தை வலியுறுத்துவதா, அல்லது அமெரிக்கா செய்யப்போகும் விசாரணைக் கூண்டுக்கு இழுக்கு நேர்ந்துவிடப் போகிறதே அதகளப்படுவதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்களுக்குப் புரிந்து கொள்ள முடிகிறதா? ரணிலுடன் கைகோர்த்து யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்துவார்கள்; வலி வடக்கில் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை உருவாக்குவார்கள். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மட்டும் அவரை இவர்களும் வற்புறுத்த மாட்டார்கள்; அவராக எதையாவது சொல்லிவிட்டாலும் பதறியடித்துக்கொண்டு எதிர்ப்புக் காட்டுகிறார்கள். தீர்வல்ல இவர்களது நோக்கம். தேர்தல்களுக்காக இங்கு குழப்பங்களும் அவலங்களுமான சூழலை உருவாக்கிப் பதவிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதே!

No comments:

Post a Comment