யாழ்.போதனா வைத்தியசாலையின் காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் கடந்த வியாழக்கிழமை இரவு கந்தர்மடச் சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவத்துக்கான சூத்திரதாரிகளை இன்னும் பொலிஸார் கைதுசெய்யயாததை கண்டித்து நாளை ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று(24.12.2012)நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மருத்துவ சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சூத்திரதாரிகளை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டுமென கோரியே, நாளை காலை 8 மணிமுதல் 9 வரை கடமையில் இருந்து வெளிநடப்பு செய்யவுள்ளதாகவும், அவசர சிகிச்சை, புற்றுநோய்ப் பிரிவு, குழந்தை மருத்துவ பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவு ஆகியன வழமை போல் இயங்குமென்றும், தனியார் மருத்துவமனைகளிலும், தனியார் சிகிச்சை நிலையங்களிலும் எதுவித சிகிச்சைகளும் மேற்கொள்வதில்லை எனவும் வைத்தியர்கள் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வாறு வைத்தியர்கள் மீதான தாக்குதல்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களின் பற்றாக்குறையினை மோசமாக்குவதுடன், பொதுமக்களின் சிகிச்சைகளையும் பாதிக்கும் வகையில் ஏற்படுகின்றதால், இவ்வாறான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிப்பதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாரிடம் வைத்தியர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment