Thursday, January 17, 2013

இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் அவசரத்தில் முறை தவறுகிறதா பிபிசி தமிழ்? கேட்கிறது சோனகர்.கொம்

தமக்கு சாதகமான விடயங்களை திரித்துக் கூறுவதில் அன்றைய லங்கா புவத்தையே (1980-1990) மிஞ்சும் அளவுக்கு முன்னேறி வரும் பி.பி.சி தமிழ் சேவை இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதிலும் முஸ்லிம்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவதிலும் மும்முரமாகச் செயற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சமீபத்தில் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் ஒருவரை சிக்கலில் மாட்டிவிட்டு அழகு பார்த்த பி.பி.சி ஊடக தர்மம் தவறிச் செயற்படுகிறதா எனும் சந்தேகம் எழுந்த போது, அதனடிப்படையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட சில விசாரணைகள் பி.பி.சி தமிழ்சேவையினர் தமது இஸ்லாமிய விரோத மனப்பான்மையை அரங்கேற்றுகிறார்களா எனும் சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.

பி.பி.சி எனும் நன்கறிந்த, புகழ்பெற்ற, சர்வதேசப் பெயரினைப் பயன்படுத்தித் திடீர் திடீர் என தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு,காரணங்களை முழுமையாக விளக்காது பேட்டிகள் மேற்கொள்வதையும், அந்தப் பேட்டிகளிலிருந்து குழப்பத்தை உருவாக்கக்கூடிய கருத்துகளை மாத்திரம் வெட்டி – ஒட்டி அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை எள்ளி நகையாடுவதையும் தன் திட்ட நிரலில் இணைத்து பி.பி.சி தமிழ் சேவை செயற்படுவது போன்று இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

நடுநிலைமையில் இருந்து செய்தி வெளியிடுவதிலோ, விமர்சனங்களை முன்வைப்பதிலேயோ தவறில்லை, அதை இலங்கை முஸ்லிம் சமூகம் நிச்சயமாக வரவேற்கும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் திட்டமிட்ட விஷ நடவடிக்கைகளை பி.பி.சி தமிழ் சேவையினர் அரங்கேற்றுவது சமூகத்துக்கெதிரான விடயமாகவே பார்க்கப்படுகிறது.

இவ்விடயத்தில் அங்கு பணியாற்றும் இலங்கை, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு நபர் மும்முரமாகச் செயற்படுகிறாரா எனும் சந்தேகம் எம்மோடு உரையாடிய மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் தற்போது வலுத்து வருகின்றது.

விபச்சாரம் பற்றி ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர் சர்மிளாவிடம் கருத்தறிவதாகக் கூறி அவரை பேச வைத்த இக்குறிப்பிட்ட நபர் அவர் விபச்சாரத்தை அங்கீகரிக்கும் முஸ்லிம் பெண் எனும் ரீதியில் செய்தி வெளியிட்டு சமூகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது மாத்திரமன்றி அந்தப் பெண் எழுத்தாளரை சங்கடத்திலும் மாட்டி விட்டிருந்தார் என்பது நினைவுகூரப்படும் அதேவேளை, ரிஸானாவின் மரண தண்டனையின் பின் ஊர் நிலையை அறிய முயற்சிக்கிறோம் எனும் அடிப்படையில் ஊரைச் சேர்ந்த ராஜிஸ் என்பாரைச் செவ்வி காண்கிறோம் என்று எப்படியாவது அவர் வாயால் தான் எதிர்பார்க்கும் ஒரு முடிவினை சொல்ல வைக்க வேண்டும் என்பதில் இந்நபர் எவ்வாறு முயற்சி செய்கிறார் அதைப் பேட்டி தருபவர் எவ்வாறு தவிர்க்க முனைகிறார் என்பதை பி.பி.சி. தமிழ் இணையத்திலேயே கேட்கலாம். (http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130110_raajiis.shtml)

ஊடகவியலாளனாக உண்மையைக் கொண்டு வர முயற்சிப்பதற்கும் தான் உண்மை என நம்பும் “அந்த விடயம்” மாத்திரம் தான் வெளியில் வர வேண்டும் எனும் அடிப்படையில் அழுத்தங்கள் மேற்கொள்வதற்குமிடையில் இருக்கும் வித்தியாசத்தை அறியாத நிலையில் குறிப்பிட்ட நபரோ பி.பி.சி ஊடகவியலாளர்களோ இல்லை ஏனெனில் தற்போதைய பி.பி.சி தமிழ் சேவையில் பணியாற்றுவோர் பெரும்பாலும் நீண்ட காலமாக (வேறு யாரையும் உள்ளே வரவிடாமல்) தங்கித் தரித்திருப்போருமாகும்.

இந்நிலையில் செய்திகளை வெளியிடும் போது ஏதோ தற்செயலாக இடம்பெற்றது போன்ற தோரணையில் வேண்டுமென்றே இஸ்லாமிய வார்த்தைகளில் எழுத்துத் திரிவாக்கம் செய்வது ( எ.கா: ஷரியாவை ஒரு இடத்தில் ஷரியா என்றும் இன்னொரு இடத்தில் ஷாரியா என்றும் எழுதுவது) நடு நிலையில் உண்மையைத் தெரிவிக்கத் தவறுவது, உதாரணம் அவர்களது ஷரியா சட்டமும் சவுதி அரேபியாவும் எனும் இம்மாதம் 16ம் திகதியிட்டு பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் “வெள்ளைத்தோலுக்கு மரியாதை” என்ற விளக்கத்தின் கீழ் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த வில்லியம் சாம்சன் என்பார் தனது பாஸ்போட் தான் தன் தலையைக் காப்பாற்றியது என்று கூறிய விடயத்தை மாத்திரம் வெளியிட்டிருக்கிறார்கள் (http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130116_saudikilling.shtml)

ஆனால், உண்மையில் வில்லியம் சாம்சனின் விடுதலை விவகாரம் முடிவுறுவதற்கு அவருக்கு வழங்கப்பட்ட “மன்னிப்பு” எனும் காரணம் இருந்தது என்பது மாத்திரமன்றி கனேடிய பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தும் கூட சவுதி அரேபிய சிறைக் கொடுமைகளில் இருந்து அவர் தப்பவில்லை என்பதை ஏலவே நாம் தெரிவித்திருந்தோம். (பார்க்க: பழிக்குப் பழி மாற்றீடே கிடையாதா ?)

அந்த வகையில் ஒரு நடு நிலை ஊடகமாக இக்குறிப்பிட்ட விடயத்தினை விளக்கும் போது அவரது விடுதலையோடு சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் இணைத்துக்கொள்வதுதான் ஊடக தர்மம். ஆனாலும் அதிலிருந்தும் விலகி தாம் விரும்பும் கருத்தைத் திணிக்க முயற்சிக்கிறது பி.பி.சி தமிழ் சேவை.

மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுறுத்தல் என்று செய்தி வெளியிட்டு, கடிதப் பிரதியையும் “பெற்று” பிரசுரித்த பி.பி.சி தமிழ் சேவை கடிதத்தின் வடிவத்தையும், அது எழுதப்பட்டிருக்கும் விதம் குறித்தும் நிறைந்த அனுபவமிருந்தும் கூட அது பற்றி ஒரு வார்த்தைதானும் எழுதாமைக்கு ஒரு வேளை ரிஷாத் பதியுதீன் எனும் முஸ்லிம் அமைச்சர் காரணமா என்கிற சந்தேகமும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

அது மாத்திரமன்றி ஆகக்குறைந்தது அக்கடிதம் சர்வதேச ஊடகமான தங்கள் கைக்கு எவ்வாறு வந்தது என்பது குறித்துக்கூட கருத்து வெளியிடாமை சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த எமது பதிவு : ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் : திட்டமிட்ட பரப்புரையா?

ஏனெனில் யாருக்குத் தெரியுமோ இல்லையோ பி.பி.சி. தமிழ் சேவையினருக்கு, அதிலும் குறிப்பாக அங்கு பணியாற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நபருக்கு இவ்வாறான கடிதங்கள், அவற்றை சர்வதேச ஊடகங்களை அடையச் செய்தல் மற்றும் அவற்றின் ஆக்கம் மற்றும் வடிவம் தொடர்பான நுண்ணறிவு நிறையவே இருக்கிறது என்பது பல ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டும் விடயமாகும்.

No comments:

Post a Comment