குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன, கலாசாரம் சீரழிகிறது என்பதைச் சொல்வதில் சில ஊடகங்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் உள்ள குதூகலத்தைப் பார்க்க முடிகிறது. இவர்கள் உணர்ச்சிகரமான பரபரப்புக் கோஷங்களால் பண ஆதாயத்தையும் அரசியல் ஆதாயத்தையும் ஈட்டிக்கொண்டிருப்பது ஒன்று. இவையெல்லாவற்றுக்கும் அரசாங்கமும் மாற்று இனத்தவர்களும்தான் காரணம் என்ற அரச எதிர்ப்பை - இன வெறுப்பை எரியவிட்டுக் குளிர்காயலாம் என்பது மற்றொன்று.
குற்றச் செயல்கள் எங்கும்தான் நடைபெறுகின்றன. அமெரிக்காவிலும், சீனாவிலும், டெல்லியிலும், ஏன் தண்டனைகளால் குற்றத்தைக் குறைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் சவூதி போன்ற நாடுகளிலும் கூட குலைநடுங்க வைக்கக் கூடிய குற்றச் செய்திகள் நாளுக்குநாள் நமக்கு அறியவந்துகொண்டுதான் இருக்கின்றன.
நம்மிடம் குடிகொண்டிருக்கும் வன்முறையுணர்வும், நகரமயமாக்கத்தாலும் உலகமய நுகர்வுக் கலாசார விரிவாக்கத்தினாலும் அது பெருக்கப்படுவதும் இந்த குற்றச் செயல்களின் அதிகரிப்புக்குக் காரணம்.
இளைஞர்கள் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்குக் காரணமாக வெறும் உடல் தேவையை மட்டுமே சொல்ல முடியாது.
பெண்களைச் சமூகம் எப்படி நடத்துகிறது? எப்படி மதிப்பிடுகிறது? ஆண்களை விட, பெண்களைக் கீழானவர்களாகக் கருதும் மனநிலை உள்ளது. ஓர் ஆண் இரவில் கடற்கரையில் தனியாக இருந்தால், யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு பெண் அப்படி இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம்?
பெண்ணை சக மனித உயிர் என்பதாகப் பார்க்கும் பார்வை இப்போது இல்லை. வெறும் உடலாகப் பார்க்கும் பார்வையே உள்ளது. இந்த எண்ணத்தை வளர்த்துவிடுவதைப் போல இன்றைய திரைப்படக் காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையத்தளங்களும் உள்ளன.
பெண் என்றால் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். இப்படித்தான் உடுத்த வேண்டும். இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கு என்று தனியான கட்டுப்பாடுகளை விதிக்கும் சமூக மனோபாவம் இருக்கிறது. அது பெண்களைச் சற்றுக் கீழான நிலையில் வைக்கிறது.
அதனால்தான் ஓர் ஆண் எப்படி உடை அணிந்தாலும் பெண்கள் அவர்களைப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு பெண் சற்று வித்தியாசமான உடை அணிந்தால் எல்லாரும் பார்க்கிறார்கள். கிண்டல் அடிக்கிறார்கள். எனவே இப்படிப்பட்ட கருத்துகளை மாற்ற வேண்டும். அதற்கு எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்களின் மீதான பாலியல் வன் முறைத் தாக்குதல்களைக் குறைக்க முடியும்.
திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களிலும் இளைஞர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்? அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டும் சமூகக் காரணங்கள் எவை? என்று கண்டறிய வேண்டும். அந்தக் காரணங்களை நீக்க முயற்சி செய்ய வேண்டும்.
சக மனிதனைத் துன்புறுத்தக் கூடாது என்ற எண்ணம் இளம் வயதினரின் மனதில் அழுத்தமாகப் பதியும்படி நாம் அவர்களை வளர்க்க வேண்டும். கற்றுத் தர வேண்டும். மனிதனின் மிருக குணத்தை மனித குணமாக்கும் கலாசார சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நம் எல்லோருக்குள்ளும் ஒளிந்துள்ள வன்புணர்ச்சியாளர்களைப் பிடுங்கி எறிய நாம் வழிகாண வேண்டும்.
நாம்தான் உயர்ந்த கலாசாரத்தினர். அதை அழிப்பதற்கா கவே மற்றவர்கள் குற்றச்செயல்களைத் தூண்டிவருகிறார்கள் என்று மாயைகளில் பிரலாபிப்பதை விடுத்து, குற்றங்கள் நடை பெறுவதற்கான சமூகக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்க முயல்வதே சிறந்தது.

No comments:
Post a Comment