நாவல, வலாஉவத்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த சிங்கள ரவாய அமைப்பைச் சேர்ந்த பிக்குமார்களும், குண்டர்களும் வீட்டைச் சேதப்படுத்தியும், அங்கிருந்தோர் மீது தாக்குதலும் நடாத்தியுள்ளனர். இந்நிகழ்வு நேற்று (15) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.சட்டவிரோதமான முறையில் மத பிரசார நடவடிக்கைகள் அந்த வீட்டில் இடம்பெறுவதாகக் கூறியே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வீட்டுச் சொந்தக்காரரின் மனைவியை பிள்ளையின்முன்னிலையில் வைத்துத் தாக்கும் காட்சியைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் காணொளியாக்கியுள்ளது. குறித்த வீட்டில் பௌத்த சிலைகளுடன் ஏனைய மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் படங்களும் அருகருகே வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்றுமாறு பெளத்த மதகுரு தன் அடியாட்களுக்குக் கட்டளையிட்டதாகவும், அங்கு சமுகந்தந்திருந்த மற்றொரு பிக்கு அங்கிருந்த பைபிளை வீசி யெறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்துள்ள பொலிஸார் இரு தரப்பினரையும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தமது வீட்டுக்கு வந்த குண்டர்கள், வீட்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு தொகைப் பணத்தைக் களவாடிச் சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டார் பொலிஸில் முறைப்பாடு செயதுள்ளனர்.
(கேஎப்)
No comments:
Post a Comment