Wednesday, May 1, 2013

சீன - இந்திய 3-வது கட்ட பேச்சு வார்த்தை தோல்வி! சீன ராணுவத்தினர் லடாக் எல்லையிலிருந்து திரும்பி செல்ல மறுப்பு

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த மாதம் 15-ந் திகதி திடீரென ஊடுருவிய சீன ராணுவம் இந்திய மண்ணில் சுமார் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமித்ததுடன் சீன வீரர்கள் 5 கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அவர்கள் லடாக் நோக்கி மேலும் முன்னேறாமல் இருக்க இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தை பின் வாங்கி செல்ல இந்தியா முதலில் கோரிக்கை விடுத்தது. ஆனால் சீனா அதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து இந்தியா- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. 2 தடவை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் லடாக் அருகே மூன்றாவது தடவையாக சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.

சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேவை இல்லாமல் வந்து இருப்பதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த சீனா, தாங்கள் இருக்கும் பகுதி, சீனாவின் எல்லைக்குட்பட்டது என்றனர். இதனால் நேற்று நடந்த 3-வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இது இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

லடாக் எல்லையில் ஆக்கிரமித்த பகுதியில் இருந்து திரும்பி செல்ல மறுக்கும் சீன நாணுவத்தினர் நேற்று பேச்சு வார்த்தையின் போது இந்தியாவிடம் சில நிபந்தனைகளை விதித்தனர். லடாக் எல்லையில் நிரந்தர கண்காணிப்பு கூடாரத்தை இந்தியா கட்டக்கூடாது என்றனர். மேலும் பக்சி, சுமர் செக்டார்களில் இந்தியா கட்டியுள்ள எல்லையோர கூடாரங்களை உடனே பிரித்து விட வேண்டும். சீன படைகளை நோக்கி இந்தியாவின் எந்த கூடாரமும் இருக்க கூடாது. தற்போது இருக்கும் பகுதியில் இருந்து இந்தியா முதலில் பின்வாங்கி செல்ல வேண்டும். கண்காணிப்பு பணியிலும் ஈடுபடக்கூடாது என்று சீனா கூறியுள்ளது.

No comments:

Post a Comment